2008 எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடம். ஏன்? பல நிகழ்வுகள் காரணமாக இருந்தாலும், அதில் முக்கிய சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. புதிய வேலை அனுபவங்கள்
வேலை நிமித்தமாக வாடிக்கையாளரின் வங்கியில் பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தம். முதல் மாதம் இரவு நேர பணியில் வேலை செய்தேன் பின்பு 4 மாதங்கள் பகல் நேர வேலை. வாடிக்கையாளர் கணினி பயன்பாட்டில் காணும் நெருக்கடிகளில் உதவி செய்ய வேண்டும் மற்றும் பயன்பாட்டினை கற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டும். இவ்விரு பணியும் எளிதாக இருக்கும் என்று நினைத்து சென்றேன், ஆனால் ஏமாற்றமே! தினமும் பல வகையான கேள்விகள், சவால்கள் மற்றும் புதுமையான சம்பவங்கள். இவை அனைத்தும் சேர்ந்து பல அனுபவங்களை கற்றுத்தந்தது; எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வேலை செய்ய வேண்டும்; இப்படி பல எப்படி கலந்ததாக தொடங்கியது 2008 வருடம்.
2. அண்ணன் திருமணம்
இரு மணம் சேரும் திருமணம், என் வீட்டின் முதல் திருமண வைபோகம் ஆதலால் மிகவும் பூரிப்புடன், புத்துணர்ச்சியுடன், ஆசைகளுடன் சென்னை வந்து இறங்கினேன். சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு என் அண்ணன் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்பொழுது என் அன்னை அவருக்கு தேடாத வரன் இல்லை எவ்வளவு அலைச்சல். தனியாக யோசித்து, தனியாக செயல் பட்டு என் அண்ணனுக்கு ஏற்ற மணமகளை தேர்ந்தெடுத்து திருமணம் நிச்சயம் செய்தார். என் அண்ணன் சென்னைக்கு மாற்றம் பெற்று வந்த நாள் முதல் கல்யாண வேலைகள் அனைத்தையும் என் அண்ணனும் அன்னையும் பரபரப்புடன் செய்து கொண்டிருந்தார்கள், நான் என் பங்கிற்கு திருமணத்தில் படம் எடுக்க கம்பீரமாக காட்சி கொடுத்தேன். இந்த வருடத்தின் அனைவருக்கும் முக்கிய சந்தோஷமான சம்பவம் என் அண்ணன் திருமணம். நான் மிகவும் ரசித்து, சந்தோஷத்துடன் இருந்த தினம் என் அண்ணன் திருமணம்.
3. என் காதலின் அங்கிகாரம்
எல்லாரும் என் அண்ணன் கல்யாணத்துக்கு காத்துகிட்டு இருந்தோம். சில நேரம் என்னடா அண்ணன் இப்படி நந்தி மாதிரி நிக்குறாரு, சீக்கிரமா அவருக்கு கல்யாணம் நடக்கணும் அப்படின்னு கடவுளிடம் விண்ணப்பம் போடுவேன்; என் விண்ணப்பமும் கடவுளால் தேர்வு செய்யப்பட்டது.
என் அண்ணன் திருமணம் முடிந்த உடன் என் வழி தடை இன்றி செல்ல தொடங்கியது… அதாங்க என் காதல் வாழ்க்கை.
பொண்ணு வீட்டுல தயாரா இருந்தாங்க. பின்ன, என்ன மாதிரி நல்ல பயன் கிடைக்குறது கஷ்டம் அதுனால என் மாமியார் வீட்டுல சம்மதம் சொல்லிடாங்க, அப்புறம் என்ன என் அண்ணனும், அன்னையும் சம்மதம் சொல்ல இனிதே நிறைவேறியது என் நிச்சயதார்த்தம்.
4. பதிவுலகில் என் பயணம்
மிக சிறந்த அறிவியல் வளர்ச்சி நான் கண்டது இந்த 2008 வருடத்துல தான். என்ன சொல்வது 2007 வருடம் நான் ஆங்கில பதிவுலகம் பற்றி அறிந்து கொண்டேன், ஆனால் அது என்னை ஈர்க்கவில்லை; படிப்பதுடன் சரி அதற்கு மேல் பதிய வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை, வேலையில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தேன். 2008 வருடம் கொஞ்சம் என் பார்வையை பதிவுலகம் நோக்கி செலுத்தியது, சில பதிவுகள் என்னை வியப்படைய வைத்தது, சிலர் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பதியும் தோரணை எனக்கு பிடித்தது, மெல்ல மெல்ல பதிவுலகில் நடக்க தொடங்கினேன், முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன் பின்பு தமிழில் பதிய ஆரம்பித்தேன்.
5. தோழியின் கனவு
என் தோழியின் கனவு பற்றி நான் எழுத காரணம் தெரியவில்லை. ஆனால் நான் சிங்கப்பூரில் இருந்த காலம் எனக்கு பல உதவிகள் செய்தால், இதுவரை என் நண்பர்கள் என் மீது உரிமை கொண்டாடியது இல்லை; அது எங்களுக்குள் பெரிய இடைவெளியை புகுட்டியதும் இல்லை. ஆனால் இவளின் நட்பில் உரிமை இருந்தது பல விதங்களில் வித்யாசம் இருந்தது, நட்பை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. அவளின் கனவு கணவனை அவளிடம் காட்டியதால் இந்த 2008 வருடம் அமிர்தம் என்றே சொல்வேன்.
இப்படி 2008 வருடம் பல அழகான நிகழ்வுகள், அச்சிரியங்கள், சோகங்கள், கவலைகள், அனுபவங்கள், நிறைய காதல், வாழ்க்கையின் நிறைய விஷயங்களுக்கு அர்த்தங்கள் புரிந்தது மற்றும் சிறு சிறு நினைவுகள் கலந்த மலர் மகுடமா என்னை அலங்கரிச்ச அற்புதமான வருடம்.
இனி வரும் வருடம் நிறைய அழகான நிகழ்வுகளோட வரவேற்க காத்துகிட்டு இருக்கு. இந்த 2009 பல பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும் அது நமக்கு அனுபவங்கள் தரும் அப்படின்னு நம்புவோம்.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
Filed under: அச்சிரியம், கனவுகள், சுவாரசியம்